Kalki Short StoriesKalki TimesStory

Govindanum Veerappanum Kalki Short Story Kalki Times

Govindanum Veerappanum Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

கோவிந்தனும் வீரப்பனும்

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Govindanum Veerappanum Kalki

கோவிந்தனும், வீரப்பனும் அண்டை வீட்டுக்காரர்கள். வாழ்க்கை நிலைமையில் ஏறக்குறைய இருவரும் ஒத்திருந்தார்கள்.

கோவிந்தனுக்குப் பருத்தி ஆலையில் வேலை; வாரம் ஆறரை ரூபாய் சம்பளம். வீரப்பனுக்கு ரயில்வே ஒர்க் ஷாப்பில் வேலை; அவனுக்கும் வாரம் ஏழு ரூபாய் சம்பளம். மனைவியும் இரண்டு குழந்தைகளும் கோவிந்தனுக்கு உண்டு. வீரப்பனுக்கும் அப்படியே. கோவிந்தன் வாரத்திற்கு முக்கால் ரூபாய் வாடகை கொடுத்து ஐந்தாறு குடித்தனங்கள் உள்ள வீட்டில் ஒரு சின்ன அறையில் குடியிருந்தான்.

ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இருந்தது. வீரப்பன் ஒர்க் ஷாப்பிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு சாராயக் கடை உண்டு. அவன் அந்தக் கடை வழியாகத் தான் வீட்டுக்கு வருவது வழக்கம். கோவிந்தன் ஆலையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியிலும் கள்ளுக்கடை, சாராயக் கடை, பீர்க்கடை எல்லாம் உண்டு. ஆனால் அவன் குறுக்கு வழியாகச் சந்து பொந்துகளில் புகுந்து வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்தச் சிறு வித்தியாசத்தினால் அவர்களுடைய வாழ்க்கை முறையில் நேர்ந்த பெரும் வேற்றுமைச் சொல்கிறேன் கேளுங்கள்.

சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு கோவிந்தனுக்கு ஆலையில் சம்பளம் கொடுத்தார்கள். ரூபாய் ஆறரையையும் அவன் வாங்கிப் பத்திரமாய் முடி போட்டுக் கொண்டு குறுக்கு வழியாய் வீடு வந்து சேர்ந்தான். அவன் மனைவி சுந்தரமும், மகன் நடராஜனும் சந்தோஷத்துடன் அவன் வரவை எதிர்பார்த்திருந்தார்கள். நடராஜன் திம், திம் என்று குதித்துக் கொண்டு “அப்பா! சமுத்திரம் பார்க்கப் போகவேண்டும். சமுத்திரம் பார்க்கப் போகவேண்டும்!” என்று கூச்சலிட்டான்.

பிறகு கோவிந்தனும் அவன் மனைவியும் உட்கார்ந்து கணக்குப் பார்த்தார்கள். பின் வருமாறு செலவு ஜாபிதா போட்டார்கள்:-

வழக்கமாக சேவிங்ஸ் பாங்கியில் போட்டு வந்த முக்கால் ரூபாயையும் சேர்த்து ரூ. 4-12-0 தனியாக எடுத்து வைத்தார்கள். பாக்கிச் செலவு செய்வதற்கு ரூ. 1-12-0 கையில் இருந்தது.

“சரி, சமுத்திரக் கரைக்குப் போகலாம், புறப்படு!” என்றான் கோவிந்தன்.

சுந்தரம் மகனுக்குச் சட்டையும் குல்லாவும் போட்டு நெற்றியில் பொட்டு வைத்தாள். தானும் முகங்கழுவிக் கண்ணாடி பார்த்துக் குங்குமப்பொட்டு வைத்துக் கொண்டாள். பிறகு கைக்குழந்தைக்குக் கம்பளிச் சட்டை போட்டு இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு கிளம்பினாள். வழியில் கோவிந்தன் காலணாவிற்குப் பெப்பர்மெண்டு வாங்கி மகனுக்குக் கொடுத்தான்.

கடற்கரையில் காற்றுவாங்கப் பெரிய பெரிய மனிதர்களெல்லாம் வந்திருந்தார்கள். ஆனால் பெரிய மனிதர், சின்ன மனிதர் எல்லாருக்கும் ஒரே காற்றுத்தான் அடித்தது. கோவிந்தனும் சுந்தரமும் அலையோரத்தில் உட்கார்ந்து ஆனந்தமாய் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். மோட்டாரில் வந்தவர்களைவிட இவர்கள் அருபவித்த இன்பந்தான் அதிகமென்று சொல்லலாம். நடராஜன் குதித்து விளையாடினான். அலை மோதிக்கொண்டு வரும்போது கரைக்கு ஓடுவதும், அலை திரும்பிச் செல்லும்போது அதைப் பிடிக்க ஓடுவதும் அவனுக்கு அற்புதமான விளையாட்டாயிருந்தது.

இந்த சமயத்தில் தூரத்தில் பட்டாணிக் கடலை முறுக்கு விற்பவன் போய்க் கொண்டிருந்தான். நடராஜன் ஓடிச் சென்று அவனை அழைத்து வந்தான். அரையணாவுக்கு முறுக்கும் முக்காலணாவுக்குக் கடலையும் வாங்கினார்கள். நடராஜனுக்குத் தலைகால் தெரியவில்லை. திரும்பி வீடுபோய்ச் சேரும் வரையில் தனக்குக் கிடைத்த பங்கைத் தின்று கொண்டிருந்தான்.

பொழுது போனதும் அவர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். மத்தியானமே சமைத்து வைத்திருந்த சாப்பாடு தயாராயிருந்தது. எல்லாரும் சாப்பிட்டுவிட்டுக் கவலையின்றித் தூங்கினார்கள். கடற்கரைக்குப் போய் வந்ததற்காக கோவிந்தனுக்கு உண்டான செலவு ஒன்றரை அணாதான்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்ததும் இன்றைக்கு என்ன செய்யலாமென்று யோசித்தார்கள். பீப்பிள்ஸ் பார்க்குக்குப் போக வேண்டுமென்று தீர்மானமாயிற்று. சுந்தரம் அவசர அவசரமாய்ச் சமையல் செய்தாள். கோவிந்தன் மார்க்கட்டுக்குப் போய்க் காய்கறி வாங்கிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வேஷ்டி சட்டைகளுக்குச் சவுக்காரம் போட்டுத் துவைத்தான். பிறகு குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தான். நடராஜன் வீட்டுக் கணக்குகளைப் போட்டான்.

எவ்வளவோ அவசரப்படுத்தியும் கிளம்புவதற்கு மணி ஒன்றாகி விட்டது. சுந்தரம் சிற்றுண்டிக்காகக் கொஞ்சம் அப்பம் செய்து ஒரு பொட்டணத்தில் கட்டி எடுத்துக் கொண்டாள். புரசவாக்கம் வரையில் அவர்கள் நடந்துசென்று அங்கிருந்து டிராம் வண்டியில் போனார்கள். மாலை நான்கு மணி வரையில் பீப்பிள்ஸ் பார்க்கைச் சுற்றிச்சுற்றி வேடிக்கை பார்த்தார்கள். நடராஜனுக்குக் குரங்குகளைவிட்டுப் பிரிந்து வருவதற்கு மனமே இல்லை. மூர்மார்க்கட்டில் ஊதல் வாங்கித் தருவதாய்ச் சொன்னதின் மேல்தான் அவன் வந்தான்.

இதுவரை டிராம் சத்தம் ஒன்றறை அணாவும், பீப்பிள்ஸ் பார்க் டிக்கட் மூன்றணாவும் ஆக நாலரை அணா செலவாயிருந்தது. மூர்மார்க்கட்டில் அவர்கள் பின்வரும் சாமான்கள் வாங்கினார்கள்:-

சாயங்காலம் 5 மணிக்கு அவர்கள் வீடுபோய்ச் சேர்ந்தார்கள். போகும்போது டிராம் சத்தமும் சேர்ந்து ரூ. 1-9-0 செலவாயிற்று. நேற்று ஒன்றரை அணா செலவாயிற்று. ஆக ரூ. 1-10-6 போக பாக்கி இருந்த ஒன்றரை அணாவை ஒரு சிமிழில் போட்டு வைத்தார்கள். சுந்தரத்துக்குச் சேலை வாங்குவதற்காக இந்த மாதிரி ஏற்கனவே ரூ. 2-8-0 வரையில் சேர்ந்திருந்தது.

மறுநாள் திங்கட்கிழமை காலையில் சுந்தரம் புதிய தந்தச் சீப்பினால் தலையை வாரி முடித்து, நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள். சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டு சுறுசுறுப்பாக வீட்டுக் காரியங்களைச் செய்தாள். ஏழரை மணிக்குள் கோவிந்தனுக்குச் சோறுபோட்டு, மத்தியானத்திற்கும் பலகாரம் பண்ணிக் கொடுத்தாள். கோவிந்தன் ஸ்நானம் செய்து, சுத்தமான வேஷ்டியும் சட்டையும் அணிந்து, புதிய டிபன்பாக்ஸை கையில் எடுத்துக் கொண்டு உற்சாகத்துடன் ஆலைக்குப் புறப்பட்டான். நடராஜன் இடுப்பில் புதிய பெல்டு போட்டு அதில் ஊதலைத் தொங்கவிட்டுக் கொண்டு குதூகலத்துடன் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பினான். குழந்தை கையில் ரப்பர் பொம்மையை வைத்துக் கொண்டு ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருந்தது.

இனி அடுத்த வீட்டில் வீரப்பனுடைய குடும்பத்தார் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையை எப்படிக் கழித்தார்களென்று பார்ப்போம்.

சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு வீரப்பனுக்கு ஏழு ரூபாய் கிடைத்தது. அவன் அதை வாங்கி அலட்சியமாய்த் தன் கந்தல் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். வழியில் பீர்க்கடையைக் கண்டதும் ஒரு நிமிஷம் நின்று தயங்கினான். அப்போது உள்ளிருந்து ஒருவன் “அண்ணே! ஏன் நிற்கிறாய்? வா!” என்றான். வீரப்பன் கடைக்குள் நுழைந்தான். முதலில் ஒரு சீசா குடித்துவிட்டுக் கிளம்பி விடலாமென்று நினைத்தான். ஆனால் ஒரு சீசா குடித்ததும் இன்னொரு சீசா குடித்தால்தான் தாகம் தணியுமென்று தோன்றிற்று. ஆனால் தடுத்துக் கொண்டான். ஒரு ரூபாய் கொடுத்துச் சில்லறை கேட்டான்.

சில்லறை கொடுக்கச் சற்று நேரமாயிற்று. இதற்குள் சில சிநேகிதர்கள் வந்தார்கள். அவர்கள் குடிக்கும்போது தான் மட்டும் சும்மாயிருக்கக் கூடாதென்று இன்னொரு சீசா கேட்டான். அதையும் குடித்த பிறகு “இன்று இரண்டு சீசா பீர் குடித்தாகிவிட்டது. நாளைக்கு வரக்கூடாது. ஆகையால் சாராயக் கடையில் ஒரு திராம் வாங்கிக் குடித்து விடலாம்” என்று யோசித்து அப்படியே சாராயக் கடைக்குப் போனான். ஒரு திராம் வாங்கிக் குடித்து விட்டுப் பிறகு இன்னொரு அரை திராம் போடச் சொன்னான். கடைக்காரன் கொடுத்த சில்லறையில் ஒரு அரைக்கால் ரூபாய் செல்லாப்பணம். வீரப்பனுக்கு போதை நன்றா யேறியிருந்தபடியால் அது தெரியவில்லை. கடைக்காரன் கொடுத்த சில்லறையை எடுத்துச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். அவற்றில் நல்ல இரண்டணா ஒன்று சட்டைப் பையில் விழாமல் தரையில் விழுந்தது. அதை அவன் கவனிக்கவில்லை. ஆகவே சாயங்காலம் ஆறு மணிக்கு நல்ல பணம் ரூ. 5-12-0ம் செல்லாப் பணம் இரண்டணாவும் எடுத்துக் கொண்டு அவன் வீடு போய்ச் சேர்ந்தான்.

வீட்டில் அரிசி, பருப்பு சாமான் ஒன்றும் கிடையாது. அன்று காலைச் சாப்பாட்டுக்கே நாகம்மாள் அரிசி கடன் வாங்கிச் சமைத்திருந்தாள். எனவே மிகுந்த எரிச்சலுடன் அவள் வீரப்பன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். வந்ததும் சண்டை பிடிக்கத் தொடங்கினாள். வீரப்பன் தன்னிடமிருந்த பணத்தை அவள் முகத்தில் வீசி எறிந்துவிட்டுத் தானும் கூச்சல் போட்டான். இதைக் கண்டு அவர்களுடைய மகன் ராமன் – ஏழு வயது பையன், பயந்து வாசல்புறம் ஓடிப் போனான். நாகம்மாள் அதற்குப் பிறகு கடைக்குப் போய் சாமான் வாங்கிக்கொண்டு வந்து சமையல் செய்தாள். சாப்பிட்டு முடிய இரவு பத்து மணியாயிற்று. அப்புறம் அரைமணி நேரம் அவர்கள் காட்டுப் பூனைகள் போல் சண்டை போட்டுக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு தூங்கிப் போனார்கள்.

மறுநாள் காலையில் கறிகாய் வாங்கி வருவதற்காக வீரப்பன் பணம் கேட்டான். நாகம்மாள் செல்லாப்பணம் இரண்டணாவைக் கொண்டு வந்து கொடுத்தாள். வீரப்பன் உடனே சண்டை பிடிக்கத் தொடங்கினான். முதல் நாள் இரவு கடைசாமான் வாங்கியபோது நாகம்மாள் ஏமாந்து செல்லாப்பணம் வாங்கி வந்திருக்க வேண்டும் என்று சொன்னான். “குடி வெறியில் நீதான் வாங்கிக் கொண்டு வந்தாய்” என்றாள் நாகம்மாள். இந்த சண்டையின்போது ராமன் நடுவில் வந்து “நோட்டு பென்சில் வேண்டும்” என்றான். அவனுக்கு ஒரு அறை கிடைத்தது. நாகம்மாள் போட்டிக்குக் கைக் குழந்தையை அடித்தாள். ஏக ரகளையாயிற்று. வீரப்பனுக்கு வேஷ்டி துவைக்க நேரங் கிடைக்கவில்லை.

இத்தனை தொந்தரவுகளுக் கிடையில் நாகம்மாள் சமைத்தபடியால் குழம்புக்கு உப்புப்போட மறந்து போனாள். சாப்பிடும்போது வீரப்பன் குழம்புச் சட்டியைத் தூக்கி நாகம்மாள் மேல் எறிந்தான். அது குழந்தை மீது விழுந்தது. மறுபடிய்ம் ரணகளந்தான்.

இன்று பீர்க்கடைக்குப் போகவேண்டாமென்று முதல்நாள் வீரப்பன் தீர்மானித்திருந்தான். ஆனால் மாலை மூன்று மணி ஆனதும் இந்தத் தொல்லைகளையெல்லாம் மறந்து சற்று நேரம் “குஷி”யாக இருந்து வரலாமென்று தோன்றிற்று. ஆகவே முழு ரூபாய் ஒன்றை எடுத்துக் கொண்டு சாராயக் கடையைத் தேடிச் சென்றான்.

சாராயக் கடையில் பன்னிரண்டணா தொலைந்தது. அடுத்த சந்தில் சூதாடும் இடம் ஒன்று உண்டு. வீரப்பன் அங்கே போனான். பாக்கி நாலணாவையும் அங்கே தொலைத்தான். இருட்டிய பிறகு வீட்டுக்குக் கிளம்பினான். வழியில் குடிமயக்கத்தில் விளக்குக் கம்பத்தில் முட்டிக் கொண்டான். ஒரு புருவம் விளாங்காய் அளவுக்கு வீங்கிப் போயிற்று. வீட்டுக்குப் போனதும் படுத்துத் தூங்கிப் போனான்.

நாகம்மாள் சாயங்கால மெல்லாம் ஒரு மூலையில் படுத்து அழுது கொண்டிருந்தாள். இரவு சமைக்கவில்லை. ராமன் மற்றப் பிள்ளைகளுடன் தெருவிலும் சாக்கடையிலும் விளையாடிவிட்டு இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தான். நாகம்மாள் மத்தியானம் மீதியிருந்த சோற்றை அவனுக்கும் போட்டுத் தானும் சாப்பிட்டான். வீரப்பனை எழுப்பிச் சோறு போடவில்லை.

திங்கட்கிழமை காலையில் வீரப்பனுக்குத் தலை நோவு பலமாயிருந்தது. புருவம் வீங்கி ஒரு கண் மூடிப்போயிற்று. முணு முணுத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான். நாகம்மாள் மெதுவாகத்தான் எழுந்திருந்தாள். முதல் நாள் அழுது அழுது இப்பொழுது அவள் முகம் பார்க்க முடியாதபடி கோரமாயிருந்தது. தலைமயிர் ஒரே பரட்டை. முனகிக் கொண்டே குழம்பும் சோறும் செய்தான். வீரப்பன் அவசர அவசரமாய் அறை வயிற்றுக்குச் சாப்பிட்டுவிட்டு மத்தியானச் சோற்றுக்காகச் சண்டை போட்டு இரண்டணா எடுத்துக்கொண்டு அழுக்குச் சட்டையும் கந்தல் வேஷ்டியுமாய் ஓடினான்.

ராமனுக்கு அன்று காலை இரண்டு மூன்று தடவை அடி விழுந்திருந்தது. கணக்குப் போடவில்லையாகையால் பள்ளிக்கூடத்துக்கும் போய் அடிபடி வேண்டுமேயென்று அவன் கண்ணைக் கசக்கிக் கொண்டே பள்ளிக்கூடம் சென்றான். கைக் குழந்தையைக் கவனிப்பார் யாருமில்லை. அது ஒரு மூலையில் படுத்து அழுது கொண்டிருந்தது.

வீரப்பனைப் போன்ற எத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வாழ்க்கை கள்ளு, பீர், சாராயக் கடைகளினால் பாழாகி வருகின்றது. அந்தக் கடைகளைத் தொலைக்க நீங்கள் என்ன உதவி செய்யப் போகிறீர்கள்?

இத்துடன்

அமரர் கல்கியின் கோவிந்தனும் வீரப்பனும்

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Govindanum Veerappanum Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,govindanum veerappanum Audiboook,govindanum veerappanum,govindanum veerappanum Kalki,Kalki govindanum veerappanum,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *